செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

Published On 2021-04-15 18:21 GMT   |   Update On 2021-04-15 18:21 GMT
ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 1,000 முதல் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பில் உள்ளதாகவும், ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டால் அடுத்த முறையும் அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News