செய்திகள்
ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் - டிரைவர் கைது
ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் முகமது சபிக். இவருடைய மகன் இப்ராகிம் (வயது 24). கார் டிரைவர். இவர் ஈரோட்டை சேர்ந்த ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை பார்த்தார். அப்போது, கார் உரிமையாளரின் மகளான 17 வயதுடைய சிறுமியிடம் அவர் பழகி உள்ளார். அந்த சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த 23-ந் தேதி இப்ராகிம் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் கடத்தப்பட்ட சிறுமியையும், கடத்தி சென்ற இப்ராகிமையும் போலீசார் தேடி வந்தார்கள்.
இந்நிலையில் இப்ராகிம் ஈரோடு டவுன் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, இப்ராகிமை கைது செய்தார்கள். மேலும், அவருடன் இருந்த மாணவியையும் போலீசார் மீட்டார்கள்.
கைதான இப்ராகிம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இப்ராகிமை போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.