செய்திகள்
கந்திகுப்பம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
கந்திகுப்பம் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். ராணுவ வீரர். இவருடைய மனைவி வீணா (வயது 30). இவர் கடந்த 8-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மாலை அவர் மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வீணா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.