செய்திகள்
விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள்.

விருதுநகரில் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பு

Published On 2021-04-08 14:52 IST   |   Update On 2021-04-08 14:52:00 IST
பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்பானங்களை தேடி செல்கின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வழக்கமாக சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டால் கடுமையான வெயில் அடிக்கும்.

இந்தநிலையில் தற்போது பங்குனி மாதமே வெயில் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது.

ஆதலால் பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். தற்போது திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

விருதுநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆதலால் மக்கள் வெப்பத்தை தணிக்க பழக்கடைகளையும், இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றையும் தேடி செல்கின்றனர். அதேபோல தர்பூசணி பழங்களின் விற்பனையும் தற்போது அமோக நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது கிலோ ரூ.20-க்கு தர்பூசணி விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், மதுரை செல்லும் சாலைகளில் ஆங்காங்கே தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இங்கு இளநீர், கரும்புச்சாறு, கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தர்பூசணியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News