செய்திகள்
பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் திருட்டு
பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆயப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது62). இவர் தனது மனைவி ரஹமத் நிஷாவுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். வீட்டில் ரஹமத் நிஷாவின் தாய் சம்சுல்ஹூதா மட்டும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்சுல்ஹூதா கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் விக்டோரியா கொல்லைப்புறத்திற்கு செல்வதற்காக சந்து வழியாக சென்றுள்ளார். அப்போது கொல்லைப்புறத்தில் இருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இதுகுறித்து சம்சுல்ஹூதாவின் சகோதரர் அக்பர் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்சுல்ஹூதா வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 12 பவுன், ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் அக்பர் அலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.