செய்திகள்
வடபாதியில் வயலில் வேலை செய்த பெண்களிடம் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

பூம்புகார் அருகே சொந்த ஊரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய துர்கா ஸ்டாலின்

Published On 2021-04-02 17:30 GMT   |   Update On 2021-04-02 17:30 GMT
பூம்புகார் அருகே சொந்த ஊரில், தி.மு.க. வேட்பாளருக்கு துர்கா ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். கிராமம், கிராமமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
திருவெண்காடு:

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஆகும். நேற்று காலை திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். கீழ வீதியில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வடபாதி, சின்ன பெருந்தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் வாக்காளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி மலர்ந்த உடன் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். சொந்த ஊரான திருவெண்காடு பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்ற பாடுபடுவேன்.

எனவே வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து இரவு, பகலாக பாடுபட வேண்டும் என்றார்.

துர்கா ஸ்டாலினுடன் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார், ஒன்றிய பொருளாளர் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் அமைப்பாளர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அல்லி மேடு, அகர பெருந்தோட்டம், பெருந்தோட்டம் ஆகிய இடங்களில் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பெருந்தோட்டம் கடைத்தெருவுக்கு வாக்கு சேகரிக்க வந்த அவரை ஊராட்சி தலைவர் மோகனா ஜெயசங்கர் தலைமையில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
Tags:    

Similar News