செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 50 மூடை அரிசி பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 50 மூடை அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நகரில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திராபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி கண்காணிப்புக்குழு அலுவலர் சிவராம்குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை நிறுத்தி அவர்கள் சோதனை செய்து பார்த்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி மூடை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 50 மூடை அரிசி பிளாஸ்டிக் பைகளில் இருந்தது ெதரியவந்தது.
இதையடுத்து அந்த அரிசி மூடைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முருகன், வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், தாசில்தார் சரவணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறியதாவது:-
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி குறித்து தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் அரிசி எங்கிருந்து கொண்டு செல்லபட்டது என்பது தெரியவரும்.
மேலும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் சோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே இது ரேஷன் அரிசியா அல்லது எந்த வகையான அரிசி என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை வட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.