செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் டிரைவர்கள் மோதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்சை எடுப்பதில் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சிவகாசியில் இருந்து தனியார் பஸ் ஒன்றும், அரசு பஸ் ஒன்றும் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்குள் வந்தவுடன் பஸ்சை எடுப்பதில் இந்த 2 டிரைவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் அரசு பஸ் டிரைவர் அரசு பஸ்சை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து எந்த பஸ்சும் வெளியே செல்லாத வகையில் குறுக்கே நிறுத்தினார்.
இதனால் பஸ் நிலையதத்தின் நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதால் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விரைந்து சென்று தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.