செய்திகள்
உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட சேலை, வேட்டிகள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான சேலை, வேட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறையை சேர்ந்த முகைதீன் ஆரிப் ரகுமான் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் காட்டன் வேட்டி, சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவை இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் மதுரையை சேர்ந்த பாஸ்கர் என்பதும், கேரளாவில் உள்ள பத்தினம் திட்டை பகுதியில் இருந்து மதுரைக்கு அந்த கார் செல்வதும், அந்த துணிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுதது அந்த சேலை, துண்டு, சட்டை ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.