செய்திகள்
கொரோனா தடுப்பூசி

காரைக்காலில் இதுவரை 2,461 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

Published On 2021-03-14 08:48 IST   |   Update On 2021-03-14 08:48:00 IST
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,461 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என நலவழித்துறை தெரிவித்துள்ளது.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தினசரி நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 89,909 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் கடந்த 11-ந் தேதி வரை 4,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த 12-ந் தேதி 202 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,066 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 72ஆக உள்ளது. மேலும், 3,950 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய நிலையில், மீதி 49 பேர், மாவட்ட அரசு பொது மருத்துவமனை, தங்கள் வீடுகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில், இதுவரை 621 சுகாதார பணியாளர்கள் மற்றும் 1,093 முன்கள பணியாளர்கள் என, மொத்தம் 1,714 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை 374 பேரும், 45 முதல் 59 வயதுடன் இணை நோய்கள் உடையவர்கள் 70 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக, 303 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

காரைக்காலில் முதல் மற்றும் 2-வது தவணையாக, இதுவரை 2,461 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News