செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்- கவர்னருக்கு கோரிக்கை
பி.ஆர்.டி.சி, அங்கன்வாடி, கான்பெட், ரொட்டிப்பால் ஊழியர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
காரைக்கால்:
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், பி.ஆர்.டி.சி, அங்கன்வாடி, கான்பெட், ரொட்டிப்பால் ஊழியர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
கொரோனா காலத்திலும், தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளையும் செய்து வருகின்றார்கள். சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் பணியாற்றுவதால் மனஉளைச்சலில் உள்ளனர். எனவே கவர்னர் அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.