செய்திகள்
தாக்குதல்

புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது தாக்குதல்- 4 பேருக்கு வலைவச்சு

Published On 2021-03-09 11:22 GMT   |   Update On 2021-03-09 11:22 GMT
புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது55). இவரது மகன் ஆசீப்கான்(33). இவர் எம்.ஜி.ரோட்டில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

அக்பர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காந்திவீதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 4 பேர் அவரை வழிமறித்தனர்.

இதில் ஒருவர் திடீரென அக்பரின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனை அக்பர் தட்டிக் கேட்டார்.

உடனே அந்த 4 பேர் கொண்ட கும்பல் அக்பரிடம் எதற்காக எங்கள் மீது மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்தாய் என கேட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கல்லாலும், கையாலும் அக்பரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சத்தம் போட்டார். உடனே அந்த 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் அக்பரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரது மகன் ஆசீப்கான் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அக்பரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல் வாணரப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News