செய்திகள்
கைது

வானூர் அருகே பணத்தகராறில் லாரியை கடத்திய 5 பேர் கைது

Published On 2021-03-09 16:43 IST   |   Update On 2021-03-09 16:43:00 IST
வானூரில் பணத் தகராறில் லாரியை கடத்தி சென்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேதராப்பட்டு:

வானூர் அருகே கனக்கபட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது40).இவர் சொந்தமாக 2 லாரிகள் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது லாரியை கலித்திரம்பட்டை சேர்ந்த சீனு என்ற மணி கண்டன் (32) திருச்சிற்றம் பலத்திலிருந்து கிராவல் ஏற்றிக்கொண்டு கனக செட்டிகுளம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இடையஞ்சாவடி அருகே லாரி வந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் லாரியை வழிமறித்து லாரியை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து லாரியின் உரிமையாளர் ராஜவேலு ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த கணேசனுக்கும், ராஜவேலுவுக்கும் பண தகராறு இருந்துள்ளது. இதன்காரணமாகவே அவர்கள் லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக கணேசனையும் லாரியை கடத்தி சென்ற அவரது ஆதரவாளர்களான புதுவை பூமியான்பேட்டை சேர்ந்த ராஜா (38),மூலக்குளத்தை சேர்ந்த தமிழ்வாணன் (29),உப்பளத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(26), உருளையன் பேட்டையை சேர்ந்த சதீஷ் குமார் (27)ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Similar News