செய்திகள்
பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை படத்தில் காணலாம்.

குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள்- வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2021-03-07 15:56 GMT   |   Update On 2021-03-07 15:56 GMT
குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி (வயது73). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக பாலமுருகன் மற்றும் குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து ஊரில் வசிக்கும் பாலமுருகனின் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து அதில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் 450 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.5½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் குத்தாலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News