செய்திகள்
கோப்புபடம்

ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி - டிரைவர் தப்பி ஓட்டம்

Published On 2021-03-04 15:02 GMT   |   Update On 2021-03-04 15:02 GMT
தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் தொழிலாளி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்தில் இருந்து டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார் புரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் பணியை முடித்து விட்டு, வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இவர் தென்காசி சாலையில் உள்ள கடம்பன் குளம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கணேசன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் அந்த இடத்தில் நிற்காமல் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு வேகமாக சென்ற அரசு பஸ்சை துரத்தி சென்றனர். அதற்குள் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே பஸ்சை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து வடக்கு போலீசார், அந்த பஸ்சில் இருந்த பயணிகளை மற்றொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த கணேசன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News