செய்திகள்
கல்குவாரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
உடல்நிலை சரியில்லாமல் இருந்த கல்குவாரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
நாகை மாவட்டம் போகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சுந்தர் (வயது 20). இவர் சாலவாக்கம் கிராமத்திற்கு அருகே உள்ள கல் குவாரியில் கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சுந்தர் மற்றும் அவரது உறவினரான தமிழ்வாணனும் உத்திரமேரூர் அடுத்த சிறுமையிலூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்தனர். கடந்த 2 நாட்களாக சுந்தர் உடல்நிலை சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் தமிழ்வாணன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது. ஜன்னல் வழியாக தமிழ்வாணன் பார்த்தபோது, அங்கு இருந்த மின்விசிறியில் சுந்தர் தூக்குப்போட்டு தொங்கியது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சுந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.