செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொள்ளிடம் பகுதியில் முதல் நாளில் 60 வயதை கடந்த 65 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-03-02 04:38 GMT   |   Update On 2021-03-02 04:38 GMT
கொள்ளிடம் பகுதியில் முதல் நாளில் 60 வயதை கடந்த 65 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என மருத்துவ அலுவலர் கூறினார்.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கொள்ளிடம் வட்டார அளவிலான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொள்ளிடம் பகுதியில் இன்று (அதாவது நேற்று) முதல் 60 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

முதல் நாளில் 60 வயதை கடந்த 65 பேர் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், புற்றுநோய் ஆகிய இணை நோய்களினால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படும்.

மருத்துவமனைகளில் நடைபெறும் முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வருபவர்கள் பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை அவசியம் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன் சதீஷ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News