செய்திகள்
சதுரகிரி மலையில் பரவிய காட்டுத்தீயால் கரும்புகை வெளியேறியதை காணலாம்

சதுரகிரி மலையில் 20 மணி நேரத்துக்கு மேலாக பற்றி எரிந்த காட்டுத்தீ

Published On 2021-03-01 09:23 IST   |   Update On 2021-03-01 09:23:00 IST
சதுரகிரி மலையில் 20 மணி நேரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. ஏராளமான மரங்கள், மூலிகைகள் தீக்கிரையாகின. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தரிசனம் செய்ய பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் ஒவ்வொரு மாதமும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மாசி மாத பவுர்ணமியையொட்டி கடந்த 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று காலை கோவிலில் இருந்து இறங்கி தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு வந்தனர்.

இந்த நிலையில் சதுரகிரி மலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தவசிப்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு, தீமளமளவென பரவியது.

இந்த சம்பவத்தில் ஏராளமான மரங்கள், அரிய தாவரங்கள், மூலிகைகள் தீக்கிரையாகின. வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன.

சாப்டூர் மற்றும் வத்திராயிருப்பு வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20 மணி நேரத்திற்கு மேலாக சதுரகிரி மலைப்பகுதியில் எரிந்த தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News