பட்டாசு ஆலையில் சிறுமியை பணியமர்த்திய உரிமையாளர் மீது வழக்கு
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சுப்புக்கனி (வயது40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பனையடிப்பட்டியில் உள்ளது.
இங்கு அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பதாகவும், சிறுமிகள் வேலை பார்த்து வருவதாகவும் பல புகார்கள் வந்தன.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி தாழம்பூ ராஜா மற்றும் வருவாய்த்துறையினர் பட்டாசு ஆலையில் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாடசாமி என்பவரது மகள் ஆர்த்தி (வயது 11) என்ற சிறுமி சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஏழாயிரம் பணணை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பட்டாசு ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் 30 அட்டை பெட்டிகளில் இருந்த வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் சுப்புக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.