செய்திகள்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது ஆகும்.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து ஏற்படுத்திய சோகம் விலகுவதற்குள் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது.