செய்திகள்
காங். அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது- புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர்
புதுச்சேரியில் தனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் முதல்வர் பேசினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்தனர். இதையடுத்து, நாராயணசாமி தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சி நீடித்ததாகவும் கூறினார். மேலும் மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விளக்கினார்.
மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக உள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆக உள்ளது. நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஓட்டுரிமை அளிக்காத பட்சத்தில் அரசு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.