செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கரூரை சேர்ந்த பைனான்சியர் பலி
மயிலாடுதுறை அருகே விபத்தில் பைனான்சியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பட்டமங்கல தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது54). கரூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், மயிலாடுதுறை பகுதியில் வட்டி தொழில் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று சண்முகம் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையிலிருந்து சித்தர்காடு நோக்கி சென்றார். மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலம் அருகில் சண்முகம் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சண்முகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சண்முகம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் மீது மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்திய மயிலாடுதுறை மூவலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.