செய்திகள்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் பிரேம்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமானுஜம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து துறை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பிச்சைப்பிள்ளை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சிவபழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.