செய்திகள்
சாத்தூர் அருகே சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சாத்தூர் அருகே மெயின் சாலையில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை மெயின் ரோட்டில் முகப்பு பகுதியில் உள்ள ஊருணி அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இந்த சாலையின் வழியாக ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி, வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் இந்த ரோட்டின் வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
மேலும் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையின் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்திற்கு காரணமாக அமைகிறது.
மேலும் இங்குள்ள ஊருணி அருகே குப்பை கொட்டப்படுவதால் ஊருணியின் நீர் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல் இந்த ஊருணி நீரை அருந்தும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் மாசடைந்த நீரினால் ஊருக்குள் கொசுக்கள் அதிகம் உருவாகிறது. இதனால் மனிதர்களுக்கும் தொற்று நோய்கள் பரவக்கூடும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.