செய்திகள்
சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதை படத்தில் காணலாம்.

கோத்தகிரி அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு - மக்கள் அவதி

Published On 2021-02-11 12:58 GMT   |   Update On 2021-02-11 12:58 GMT
கோத்தகிரி அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ராம்சந்த் சதுக்கமானது 6 முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதி ஆகும். இங்கு போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும். இதனருகில் ஹோப் பார்க் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தார்ச்சாலை கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் வழிந்தோடி செல்கிறது.

இதன் காரணமாக தார்ச்சாலை சேதமடைந்து வருவதுடன் கழிவுநீர் சாலையில் வழிந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹோப் பார்க் மக்கள் கூறும்போது, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் அந்த வழியாக நடந்து செல்வது சிரமமாக உள்ளது. வாகனங்கள் வரும்போது, நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் தெளிக்கப்படும் நிலை காணப்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல், சேதமடைந்த சாலை மட்டும் சீரமைக்கப்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News