செய்திகள்
கோப்புப்படம்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்ய கோரிக்கை

Published On 2021-02-09 23:42 IST   |   Update On 2021-02-09 23:42:00 IST
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து தாயில்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சல்வார் பட்டி, மீனாட்சிபுரம், வெம்பக்கோட்டை, கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் அதிகம் வந்து செல்கின்றனர். அவர்களை அழைத்து சென்று வர ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வருபவர்கள் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக வாடகை வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

ஆகையால் தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 சேவை ஆம்புலன்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சாத்தூர் அல்லது சிவகாசியி்ல் இருந்து வர தாமதம் ஆகிறது.

சமீபத்தில் வனமூர்த்திலிங்காபுரம் அருகே காயமடைந்தவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதம் ஆனது. ஆதலால் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் மூலமாக காயம் அடைந்தவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு என 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News