செய்திகள்
மீனவர்கள் தங்களுடைய வலையில் மாட்டிய மீன்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.

திருமுல்லைவாசல் பகுதியில் மீன் வரத்து குறைந்தது- மீனவர்கள் ஏமாற்றம்

Published On 2021-02-09 22:22 IST   |   Update On 2021-02-09 22:22:00 IST
திருமுல்லைவாசல் பகுதியில் மீன்வரத்து குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே கடற்கரை கிராமமான திருமுல்லைவாசலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், ராதாநல்லூர், வழுதலைகுடி, கீழமூவர்க்கரை, தென்னாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இங்கிருந்து மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மீன்கள் குறைவான அளவிலேயே பிடிபடுவதாக மீனவர்கள் ஏமாற்றத்துடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘தற்போது கவலை மீன் மட்டுமே பிடிபடுகிறது. இந்த மீன்கள் கிலோ ரூ.69-க்கு விற்பனையாகிறது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கவலை மீன்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கவலை மீன் மருத்துவ குணம் உடையது என்பதால் நன்கு விற்பனையாகிறது.

மேலும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. படகுக்கு பயன்படுத்தும் டீசல் மற்றும் ஆட்கள் கூலிக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை. இறால்களும் குறைந்த அளவே பிடிபடுகிறது. இதனை தரம் பிரிப்பது பெரிய வேலையாக உள்ளது. 

இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.

Similar News