செய்திகள்
நாகை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாகையில் அரசு ஊழியர்கள் 5-வது நாளாக சாலை மறியல் - 30 பெண்கள் உள்பட 50 பேர் கைது

Published On 2021-02-07 19:54 IST   |   Update On 2021-02-07 19:54:00 IST
நாகையில் அரசு ஊழியர்கள் 5-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 5-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா கலந்து கொண்டு பேசினார்.

அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் ராஜூ, சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Similar News