செய்திகள்
வில்லியனூர் அருகே மின்துறையை கண்டித்து சாலை மறியல்
வில்லியனூர் அருகே மின்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள மங்கலம் தொகுதி உறுவையாறு பேட் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மின்துறையை கண்டித்து அப்பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.