செய்திகள்
நாகூரில் 200 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் - தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
நாகூரில் 200 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகூர்:
நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் தயாரிக்கப்படுகிறதா? என ஆணையர் ஏகராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் அரசகுமார், சுந்தர்ராஜ் உள்பட நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த 200 கிலோ தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடையை மீறி பாலிதீன் பைகளை தயாரித்த அந்த நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகை நகர் பகுதியில் இயங்கி வரும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. இதை மீறி பயன்படுத்தினால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 கீழ் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.