செய்திகள்
மாணவன் தர்‌ஷன்.

செல்போனில் 4 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ்-2 மாணவன் மரணம்

Published On 2021-02-02 16:17 IST   |   Update On 2021-02-02 16:17:00 IST
புதுவை வில்லியனூர் அருகே செல்போனில் 4 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ்-2 மாணவன் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் வி.மணவெளி அன்னைதெரேசா நகர் தண்டுகரை வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கறவை மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்‌ஷன் (வயது16). இவர் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து 3 மணிக்கு தர்‌ஷன் வீட்டுக்கு வந்தார். அதுமுதல் வீட்டின் தனி அறையில் கட்டிலில் படுத்துக்கொண்டே தர்‌ஷன் காதில் ஹெட்போன் வைத்துக்கொண்டு செல்போனில் ஆன்லைனில் (பையர்வால்) விளையாடிக் கொண்டிருந்தார். இரவு 7.30 மணிக்கு சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் ஜெய்சித்ரா தர்‌ஷனை எழுப்ப வந்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி சுயநினைவு இன்றி மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தர்‌ஷனை மீட்டு அரும்பார்த்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தர்‌ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News