ஐடிபிஎல் திட்டத்துக்கு நில எடுப்பு அறிவிப்பானை வாங்க மறுத்து விவசாயிகள் போராட்டம்
மொடக்குறிச்சி:
தமிழகத்தில் தனியார் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதித்து வருகிறது. இதற்கு விசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதே போல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் (ஐ.டி.பி.எல்.) கோவையில் இருந்து பெங்களூரு தேவ கொந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதனால் திருப்பூர் ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். மேலும் இந்த திட்டத்தை சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மொடக்குறிச்சி பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மொடக்குறிச்சி அருகே உள்ள அட்டவனை அனுமன்பள்ளி அடுத் பழையபாளையம் பகுதியில் நில எடுப்பு அறிவிப்பாணை விவசாயிகளிடம் வழங்க அரச்சலூர் வருவாய் அலுவலர் கமலவதி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை தரமாட்டோம். நில எடுப்பு ஆணையை பெற்று கொள்ள மாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இதற்கு எதிராக கோஷ மிட்டனர்.
இதனால் அதிகாரிகள் அங்கு இருந்து திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதில் ஐ.டி.பி.எல். திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், தற்சாற்பு விவசாயிகள் சங்க மாநில தலைவருமான பொன்னையன், குணசேகரன், முருகேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.