செய்திகள்
ஈரோடு அருகே சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார்.
41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். அரசு பணியிடங்களை ஒழிக்கும் வகையிலான பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள் போன்றவை வழங்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள், 200-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அனைவருக்கும் தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக வழங்கினர்.