செய்திகள்
கோப்பு படம்

கிருமாம்பாக்கம் அருகே மீனவர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2021-01-28 10:28 GMT   |   Update On 2021-01-28 10:28 GMT
கிருமாம்பாக்கம் அருகே குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்த மீனவர் வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.
பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் என்கிற சிவக்குமார் (வயது 41), மீனவர். நேற்று அங்குள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வீரப்பன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது, வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனத்துக்கு பின் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த வீரப்பன், சாவியை எடுக்க முயன்றார். ஆனால், சாவி அவர் வைத்த இடத்தில் இல்லை. அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தபோது, சாவி கிடைத்துள்ளது.

உடனே, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் தங்க வளையல், மோதிரம், அட்டிகை உள்பட சுமார் 20 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.

வீரப்பன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதை நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள், ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து நகை, பணத்தை திருடியுள்ளனர். இதனால் வீரப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த துணிகர திருட்டு குறித்து வீரப்பன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News