செய்திகள்
கோப்புபடம்

கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரர் மீது தாக்குதல் - 4 பேர் கைது

Published On 2021-01-18 13:04 GMT   |   Update On 2021-01-18 13:04 GMT
கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரரை தாக்கிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பெருந்துறை:

கர்நாடக மாநிலம், பெங்களூரு அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். இவருடைய மகன் சூரஜ் குமார் (வயது 24). இவருக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் 3 மளிகை கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹரிபுல் ஹாஜி (26) என்பவர், நட்பின் அடிப்படையில் பெங்களூரில் வைத்து சூரஜ்குமாரிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை கடனாக வாங்கினார். பின்னர் அவர் தான் வாங்கிய கடனை கொடுக்காமல் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்துக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் ஹரிபுல் ஹாஜியை ெசல்போனில் தொடர்பு கொண்ட சூரஜ்குமார் தான் கொடுத்த ரூ.25 ஆயிரம் கடனை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பெருந்துறை வந்து கடனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 15-ந் தேதி பெருந்துறைக்கு சூரஜ்குமார் வந்து ஹரிபுல் ஹாஜியை சந்தித்து உள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஹரிபுல் ஹாஜி மற்றும் அவருடைய நண்பர்களான மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபு மொண்டல் (23), சபிக்காயல் (29), பெருந்துறை தோப்புபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (37) ஆகியோர் சேர்ந்து சூரஜ்குமாரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹரிபுல் ஹாஜி, பாபு மொண்டல், சபிக்காயல், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News