செய்திகள்
கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்த யானை சாலையில் கிடப்பதை படத்தில் காணலாம்.

ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி யானை படுகாயம்

Published On 2021-01-16 14:24 IST   |   Update On 2021-01-16 14:24:00 IST
ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை மீது கன்டெய்னர் லாரி மோதியதில் யானை படுகாயம் அடைந்தது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் பேரண்டப்பள்ளி, போடூர்பள்ளம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்படட யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருகின்றன. தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி வந்தது. இந்த யானை தினமும் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுற்றித்திரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளியில் அந்த யானை சாலையை கடக்க முயன்றது.

அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று யானை மீது மோதியது. இதில் யானை படுகாயம் அடைந்தது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் மூலம் யானையை தூக்கி மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கன்டெய்னர் லாரி மோதி யானை படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News