செய்திகள்
கோப்பு படம்.

உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2021-01-07 16:41 IST   |   Update On 2021-01-07 16:41:00 IST
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் வசிப்பவர் சத்திய பிரசாத். இவரது மனைவி மரிய பாஸ்டினா (வயது 30). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தனது கணவரின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக ஆவடிக்கு சென்றார்.

இந்த நிலையில் மரிய பாஸ்டினாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் ஆரோக்கியமேரி இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்த மரிய பாஸ்டினா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த அவரது தம்பியின் மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மரியபாஸ்டினா பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.

Similar News