செய்திகள்
நிலக்கடலை பயிர் சேதம்

நிலக்கடலை பயிர் 300 ஏக்கர் அழுகி சேதம்- அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2021-01-07 15:51 IST   |   Update On 2021-01-07 15:51:00 IST
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கடைமடைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் சுமார் 300 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான விவசாயிகள் போதுமான தண்ணீர் இன்றி நெல் சாகுபடியை கைவிட்டு பணப்பயிராகிய நிலக்கடலை சாகுபடியை விரும்பி செய்து வந்தனர். மேலும் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடி பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக மகசூலைத் தரும். இதனால் அனைத்து விவசாயிகளும் மார்கழி பட்டம்தான் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.

அதேசமயம் இந்த ஆண்டு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நிவர் மற்றும் புரவி புயலை தொடர்ந்து கடைமடையில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு சில நாட்கள் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி மார்கழி பட்டம் கைவிட்டுப் போகும் என்ற நோக்கில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை தொடங்கினர். ஆனால் அதற்கு பின்னரும் மழை பெய்ய தொடங்கியதால் சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிலக்கடலை பயிர் முளைப்பதற்கு முன் மரக்கா வலசை, கொடிவயல், ஊமத்தநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலக்கடலை விதை அழுகிவிட்டது. இதனால் நிலக்கடலை விவசாயிகள் அனைவரும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி அரசு நிவாரணம் வழங்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Similar News