செய்திகள்
கைது

நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

Published On 2020-12-30 04:24 IST   |   Update On 2020-12-30 04:24:00 IST
நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). விவசாயியான இவர், தனி பட்டாவாக மாற்றுவதற்கு தனது நிலத்தை அளந்து கொடுக்கும்படி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் கீழநத்தம் பகுதி நில அளவையரான கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (47), கார்த்திக்கின் நிலத்தை அளப்பதற்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக், லஞ்சம் கொடுக்க விரும்பாமல், இது குறித்து அரியலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நில அளவையர் சீனிவாசனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் ரசாயன பொடி தடவிய பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்து, அதனை சீனிவாசனிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கோவிந்தபுத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நிலத்தை அளந்து கொண்டிருந்தபோது சீனிவாசனிடம், கார்த்திக் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்துள்ளார். சீனிவாசன் அதை வாங்கியபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து, அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Similar News