செய்திகள்
குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான தார் சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2020-12-29 09:23 GMT   |   Update On 2020-12-29 09:23 GMT
உடையார்பாளையம்- முனியத்திரையான்பட்டி இடையே குண்டும், குழியுமான தார் சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இருந்து முனியத்திரையான்பட்டி வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக இந்த சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உள்ளிட்டோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் தற்போது பெய்த மழையால் அந்த சாலை மிகவும் சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையம்- முனியத்திரையான்பட்டி இடையே உள்ள சேதமடைந்த தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News