செய்திகள்
திருவெங்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
திருவெங்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி மகன் சுரேஷ்குமார்(வயது 30), கோவிந்தராஜ் மகன் செல்லதுரை. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருமானூரில் இருந்து திருவெங்கனூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.