ஒப்பந்த தொழிலாளர்கள் ‘திடீர்’ ஸ்டிரைக்: புதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை
புதுச்சேரி:
புதுவை அரசின் சாலை போக்குவரத்துக்கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் திருப்பதி, குமுளி, நாகர் கோவில், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், நகர பகுதிக்குள் டவுன்பஸ், மினி பஸ் ஆகியவை இயக்கப்படுகிறது.
அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களை தனியாருக்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் அரசின் சாலை போக்குவரத்து கழகம் படிப்படியாக தனியார் மயமாகும் என்ற அச்சம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
புதுவை அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. பி.ஆர்.டி.சி.யில் 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் திடீரென தங்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். பணிக்கு வந்த அவர்கள் பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு ஒன்று கூடி பணியை புறக்கணித்தனர்.
பி.ஆர்.டி.சி. நிர்வாகம் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களை மட்டும் நிரந்தர ஊழியர்களை கொண்டு இயக்கியது. வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட ஆட்கள் பற்றாக்குறையால் நகரம், கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
புதுவை கோரிமேடு, கன்னியக்கோவில் வீராம்பட்டினம், திருக்கனூர், கரையாம்புத்தூர், நல்லவாடு, மடுகரை, மண்ணாடிப்பட்டு, காலாப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இயக்கப்பட வில்லை.
இதுபோல நகர பகுதிக்குள் மட்டும் இயக்கப்படும் மினி பஸ்களும் நிறுத்தப்பட்டது. சுமார் 40 பஸ்கள் இயங்க வில்லை. இதனால் புதுவைக்கு வேலைக்கு வந்து செல்லும் பயணிகளும், புதுவையிலிருந்து வேலைக்கு செல்வோரும் பஸ் வசதியின்றி தவித்தனர்.
அதேநேரத்தில் தனியார் பஸ்கள், தமிழக அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கியது.