செய்திகள்
பொன்முடி

முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு போகவில்லை- பொன்முடி குற்றச்சாட்டு

Published On 2020-12-20 18:39 IST   |   Update On 2020-12-20 18:39:00 IST
முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு போகவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றி வரும் தி.மு.க.வை பார்த்து “சுயநலக் கட்சி” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சில் பேசுகிறார். ஆனால் மக்களிடம் வீதி வீதியாகச் சென்று உதவி செய்கிறார். சென்னை மாநகரம் முழுவதும் பல சட்டமன்றத் தொகுதிகளுக்குப் போயிருக்கிறார்.

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று ‘நிவர்’ புயல் பாதித்த மாவட்டங்களுக்குப் போயிருக்கிறார். கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருமே இப்படி பம்பரமாக பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் “கொரோனா கட்டுப்பாடு” என்று வைத்துக் கொண்டு அரசு பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் பத்திரமாக மாவட்டம் மாவட்டமாக முதல்-அமைச்சர் சென்றதும் ஒரு சில அ.தி.மு.க. அமைச்சர்கள் சென்றதும் எதற்காக?

முதல்-அமைச்சர் கட்சிப் பிரசாரம் செய்தார். அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகளை வசைபாடினார். அமைச்சர்கள் அ.தி.மு.க.வின் தகவல் தொழில் நுட்ப அணிக்கு உறுப்பினர் சேர்த்தார்கள். அல்லது அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ மக்கள் பணியாற்றவோ, கொரோனாவை கட்டுப்படுத்தவோ மாவட்டங்களுக்கு போகவில்லை.

அதனால்தான் தி.மு.க.வினரும், மற்ற கட்சியினரும் வெளியே போகக்கூடாது என்று கொரோனாவை காட்டி தடுத்தார். ஏன் வழக்குகளே பதிவு செய்தவரும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News