நீலகிரியில் கொட்டும் நீர்ப்பனி- கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி
ஊட்டி:
வடகிழக்கு பருவமழை நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இரவில் நீர் பனியுடன் கடுங்குளிர் வாட்டியது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்படுகிறது.
ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதேபோன்று கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் கடும் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறினர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.
குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா தலங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். இதனால், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் மிக குறைந்த சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர். கடுங்குளிரால் வேலைக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.