செய்திகள்
கோப்புபடம்

மேல்மலையனூர் அருகே விபத்து: நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதி 2 பேர் பலி

Published On 2020-12-03 09:51 GMT   |   Update On 2020-12-03 09:51 GMT
மேல்மலையனூர் அருகே பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்த காருக்கு காற்று அடித்தபோது, அந்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேல்மலையனூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் மகன் அருள்ராஜ் (வயது 18). டிரைவர். இவர் மேல்மலையனூரில் இருந்து நீலாம்பூண்டி வழியாக செஞ்சி நோக்கி காரில் புறப்பட்டு சென்றார். அப்போது கார் டயரில் காற்று குறைவாக இருந்துள்ளது. காற்றுபிடிப்பதற்காக நீலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கரீம் (60) என்பவரின் பஞ்சர் கடை முன்பு அவர் காரை நிறுத்தினார். இதையடுத்து கார் டயருக்கு கரீம் காற்று பிடித்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு கார், நின்று கொண்டிருந்த அருள்ராஜின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கரீம், காருக்குள் இருந்த அருள்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதனிடையே விபத்துக்கு காரணமான கார் டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இது குறித்து தகவலின் பேரில் வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, தனிப்பிரிவு ஏட்டு பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த கரீம், அருள்ராஜ் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News