செய்திகள்
விபத்து

அரியலூரில் லாரி மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி

Published On 2020-12-02 11:21 GMT   |   Update On 2020-12-02 11:21 GMT
அரியலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார்(வயது 18), கார்த்திகேயன்(19). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று காலை அவர்கள் 2 பேரும், தேர்வு எழுதுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றனர்.

பின்னர் மதியம் மோட்டார் சைக்கிளில் அயன் ஆத்தூர் நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தனர். ரஞ்சித் குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் கார்த்திகேயன் அமர்ந்திருந்தார். புறவழிச்சாலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தை தாண்டி வந்தபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தடுமாறி சாலையில் விழுந்த கார்த்திகேயன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News