செய்திகள்
செந்துறை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
செந்துறை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவரது மனைவி மணிமொழி(23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மணிமொழி, மாமனார் மாயவேல், மாமியார் முத்தழகி ஆகியோருடன் அருந்ததியர் தெருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனாரும், மாமியாரும் சாப்பாடு சரியில்லை எனறு கூறியதாக தெரிகிறது. இதனை கேட்ட மணிமொழி, தன்னைத்தான் குறை கூறுகிறார்கள் என்று நினைத்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிமொழிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.