செய்திகள்
நீ அழகாக இருக்கிறாய்- பாஸ்ட்புட் கடையில் பெண்ணிடம் அத்துமீறிய லாரி டிரைவர்
கோபி செட்டிபாளையம் அருகே பாஸ்ட்புட் கடையில் பெண்ணிடம் நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்லி வாய்த்தகராறில் ஈடுபட்ட லாரி டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபி:
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் தனபாக்கியம் (46). இவர் கோபி தீயணைப்பு நிலையம் அருகே தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக பால்ராஜ் (60) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
கோபியை சேர்ந்தவர் ஆறுமுகம்(47) லாரி டிரைவர். இவர் தனபாக்கியத்தின் பாஸ்ட்புட் கடைக்கு சிக்கன் ரைஸ் வாங்க சென்றார். அப்போது அவர் தனபாக்கியத்தை பார்த்து, ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று கூறினார். அப்போது தனபாக்கியம் சாப்பிட வந்தால் உன் வேலையை பார்த்து விட்டு செல் என்றார். இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஆறுமுகம் அந்தியூரை சேர்ந்த தனது நண்பர்கள் மவுலீதரன் (27), சிவமூர்த்தி (23), தினேஷ்குமார் (22) ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாஸ்ட்புட் கடைக்கு வரவழைத்தார்.
அவர்கள் 4பேரும் சேர்ந்து தனபாக்கியம் மற்றும் கடையில் வேலைபார்க்கும் பால்ராஜ் ஆகியோரை தாக்கினர். பின்னர் கடையில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணையை எடுத்து அவர்கள் தனபாக்கியத்தின் மீது வீசினர். இதில் அவரது 2 கைகளிலும் எண்ணை கொட்டி தீக்காயம் அடைந்தார்.
இதையடுத்து தனபாக்கியம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பெண்ணை துன்புறுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லாரி டிரைவர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.