செய்திகள்
சாமிநாதன்

வேலை தருவதாக முதல்-அமைச்சர் ஏமாற்றுகிறார்- சாமிநாதன் எம்எல்ஏ தாக்கு

Published On 2020-11-03 08:26 IST   |   Update On 2020-11-03 08:26:00 IST
இளைஞர்களுக்கு வேலை தருவதாக முதல்-அமைச்சர் ஏமாற்றுகிறார் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலின்போது வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஆனால் இப்போது புதுவை மாநிலத்தில் 75 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். 2½ லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பகத்தில் இருந்து இதுவரை அவர்களுக்கு ஒரு அழைப்பு கடிதம் கூட வரவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறிவருகின்றனர். அவர்கள் கூலிப்படையாக செயல்படுகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து வருகிற 6-ந்தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். அப்போது வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம்.

இத்தகைய சூழ்நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை தருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இளைஞர்களை ஏமாற்றுகிறார். அனைத்து தரப்பு மக்களும் இந்த அரசுக்கு எதிராக உள்ளனர்.

மக்களின் எதிர்ப்பினை சமாளிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் புதுப்புது கதைகளை சொல்லி வருகின்றனர். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தபின் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலம் கூட இணைக்கப்படவில்லை. அப்படியிருக்க புதுவையை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

இதை கூறிவரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும், வைத்திலிங்கம் எம்.பி.யும் பதவி விலகவேண்டும். நாங்கள் தேர்தல் பணியை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். ஆளுங்கட்சியினர்தான் தொழிற்சாலைகளில் மாமூல்கேட்டு மிரட்டுகின்றனர். இதனால்தான் கொலைகளும் நடக்கின்றன.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

Similar News