செய்திகள்
கோப்புபடம்

கஞ்சா கடத்தல்காரர் விடுவிக்கப்பட்ட விவகாரம் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Published On 2020-11-02 21:11 IST   |   Update On 2020-11-02 21:11:00 IST
காரைக்கால் அருகே கஞ்சா கடத்தல்காரர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த நிரவி போலீசார் கடந்த மாதம் விழிதியூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூட்டையுடன் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது, மூட்டையில் மதுபாட்டில் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கஞ்சா கடத்தல்காரர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பா.ம.க. காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி புகைப்பட ஆதாரத்துடன் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு புகார் அளித்தார். அதில், கஞ்சா கடத்தல்காரர் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்த, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில், முதல்கட்ட விசாரணைக்கு பிறகு, நிரவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குமாரனை பணியிடை நீக்கம் செய்து, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Similar News